Monday, February 25, 2008

சரித்திரப் பக்கம் – ஒன்று

ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி எழுத்தில் வர்ணித்தோ, ஓவியமாய் வரைந்தோ, புகைப்படம் எடுத்தோ விளக்குவதை விட வீடியோவின் மூலம் பேசுவது உங்களை அந்த இடத்திற்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். இந்த வலைத்தளத்தில் அந்த முயற்சியை தொடங்கியிருக்கிறோம்.

ந்த முயற்சியில் முதலாவதாக செங்கல்பட்டிற்கு அருகே இருக்கும் உத்திரமேரூரிலிருந்து சற்று தொலைவே உள்ள கூழாம்பந்தல் என்ற கிராமத்தில் மிளிரும் ஆயிரம் வருடத்துக் கோயிலான கங்கை கொண்ட சோழீஸ்வரத்தைப் பற்றி எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் விளக்குகிறார். எழுத்து சித்தர் தான் கண்டு அதிசயித்த இடங்களைப் பற்றி உங்களுக்குத் தொடர்ந்து சொல்வார்.

ரலாறு என்பது மனிதர்கள் வாழ்ந்த விதத்தை சொல்வது. வாழ்ந்த விதம் தெரிய, உள்ளே பதிய, வாழும் வழி புரியும்.




இந்த வீடியோவை டவுன்லோடு செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்குகளை க்ளிக் செய்யவும்.
http://www.4shared.com/file/39600807/cc3e743/Ganngaikonda_Choozhiswaramwmv.html
http://www.4shared.com/file/39602278/74a32148/Ganngaikonda_Choozhiswaramwmv.html

Saturday, February 23, 2008

“உடையார்” - “அபொகலிப்டோ” – ஒப்பீடு செய்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்…..

ஐயா, வார இதழான குமுதத்தில் மெல்கிப்ஸனின் “அபொகலிப்டோ என்ற அற்புதமான படத்தைப் பற்றி வியந்திருந்தீர்கள். மகிழ்ச்சியாக இருந்தது. அதைப் பற்றி உங்களுக்கு சொல்வதற்கு அவ்வளவு தான் இருக்கிறதா.வேறு என்ன பாதிப்பு அந்த படத்திலிருந்து உங்களுக்கு ஏற்பட்டது।




“உடையார்” நான் எழுதிய போது சில விஷயங்களை எவ்விதம் கற்பனை செய்தேனோ அவ்விதமாகவே “அபொகலிப்டோ” இருந்தது. அத்தனையும் இந்திய முகங்கள். ஏன் திராவிட முகங்கள். மயன் நாகரிகமும், திராவிட நாகரிகமும் நெருக்கமாக இருந்திருக்கிறது என்பதை அந்த படம் பார்த்து விட்டு உணர்ந்தேன்।

வளைந்த உதடுகள்,நெற்றிப்பொட்டு,கருமையான கூந்தல், கருநிற விழிகள்,ஒரு அளவான உடம்பு , மாநிறம் என்பவை நம்முடைய குணாதிசயங்கள்। இவை அனைத்தையும் மிக மகிழ்வாக அனுபவித்தேன். இந்தப் படம் பார்க்கின்ற போது இப்பொழுது எழுதுகின்ற இராஜேந்திர சோழனுடைய படையெடுப்பு பற்றியும் எனக்கு எண்ணங்கள் ஏற்பட்டன.

ஒரு ஊரை உள்ளே சென்று பாழ் செய்வது என்பது,எரியூட்டுவது என்பது, ஆண்களையும், பெண்களையும் கைது செய்து கிழவர்களைக் கொன்று குழந்தைகளைத் துன்பப்படுத்தி, பெண்களை மானபங்கம் செய்து அடிமைகளாக இழுத்துப் போவது என்பது இவ்விதம் தான் நடந்திருக்குமோ. மேலைச் சாளுக்கியத்தை இராஜேந்திரன் சூரையாடியது இப்படித் தானோ என்ற எண்ணங்கள் எனக்கு ஏற்பட்டன.

மனிதனுடைய நாகரிகம் அழிவதற்குக் காரணம் வெளியிலிருந்து வந்தவர்கள் இல்லை. உள்ளே இருப்பவர்களே அந்த நாகரிகத்தை அழிக்கிறார்கள் என்பது மிகச் சத்தியமான வார்த்தை. இந்திய நாகரிகம் கணவாய் வழியாய் வந்த அரேபியர்களாலோ,கடல் வழியாக வந்த ஐரோப்பியர்களாலோ அழியவில்லை. இந்திய நாகரிகம் சேர, சோழ , பாண்டியர்கள் என்று பிளவுபட்டு , கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று துண்டாடப்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதிலேயே அழிந்து போயிற்று.நாம் பலவீனர்களாக இருந்ததால் அந்நியர்கள் எளிதாகப் படையெடுத்தார்கள் என்பதையும் மெல்கிப்ஸனின் படம் எனக்கு உணர்த்தியது.

என்ன அற்புதமான படப்பிடிப்பு. என்ன இயல்பான நடிப்பு.ஒரு நிமிடம் கூட நம்மை தளர விடாமல் நாற்காலியின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்த அற்புதமான காவியம் “அபொகலிப்டோ” .சரித்திரத்தின் மீது காதலுள்ளவர்கள் அத்தனை பேரும் பார்க்க வேண்டிய அற்புதமான சித்திரம்.

இதே மாதிரி ஒரு படம் உடையாரைப் பற்றி மெல்கிப்ஸனோ அல்லது வேறு எவரேனும் எடுக்க மாட்டார்களா என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. “அபொகலிப்டோ” காலம் கற்காலம். உலோகம் பயன்படுத்தாத காலம். கத்திகளெல்லாம் கருங்கற்களால் ஆனவை. கட்டைகளே ஆயுதங்களாய் இருந்தன. ஆனால் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழருடைய காலமும், இராஜேந்திர சோழருடைய காலமும் உலோகத்தினுடைய மகிமையை முற்றிலுமாக உணர்ந்து சகல விதமாகவும் உலோகத்தைப் பயன்படுத்திய அற்புதமான காலம்.

தமிழில் தமிழர் நாகரிகம் பற்றிய ஒரு படம் வருமா என்பது எனக்கு சந்தேகமே.இதை ஐரோப்பிய சினிமாக்காரர்களோ, அமெரிக்க சினிமாக்காரர்களோ தான் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்மவர்கள் இன்னும் குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களுக்கு ஹீரோ ஒரு ரவுடி. ஹீரோயின் ஒரு பணக்கார வீட்டுப் பெண். இரண்டு பேரும் நடுரோடுல திடீர்னு பாத்துக்கறாங்க.காதலிக்கறாங்க என்று தான் கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமையிலிருக்கிறார்கள்.

நல்ல படம் என்பது மக்களுடைய ரசனையைப் பொறுத்தது. வலுவுள்ள இயக்குநர்கள் இங்கிருப்பினும் அவர்கள் வியாபார சூழலில் சிக்கி மக்களுக்கேற்றவாறு படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல படத்திற்கு மக்கள் தவிக்கின்ற காலம் அருகில் இல்லை. சற்று தூரத்தில் தான் இருக்கிறது.

Wednesday, February 20, 2008

குரு – ஒரு நேரடியான லீலா விநோதம் – எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பேசுகிறார்……..

கடவுள் வழிபாடு என்பது ஒரு சுகம். மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிற விஷயம்। அடுத்த நாள்,அடுத்த கணம் பற்றி தெரியாத போது இந்த நம்பிக்கை தான் ஆதாரமாக வாழ்க்கையை நகர்த்திப் போகிறது. அடுத்த நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டால் கடந்த காலத்தின் வேதனைகள் காணாமல் போகின்றன. நிகழ்காலம் மகிழ்ச்சியாய் முன்னே இருக்கிறது. நிகழ்காலத்திலேயே வாழ எதிர்கால நம்பிக்கையும், கடந்த கால வேதனைகள் பற்றிய மறதியும் மிக அவசியம்.



வழிபாடு என்பது நிகழ்காலத்தில் இருக்க வைப்பது.நிகழ்காலத்தில் இருக்கத் தெரியுமானால் உள்ளுக்குள்ளே எண்ணங்கள் தோன்றும் போதே பார்த்துத் தெளிந்து விடலாம். உள்ளே எண்ணங்கள் தோன்றும் போதே பார்க்கத் தெரிந்து விட்டால், நல்லது கெட்டது என்பதைத் தாண்டி அந்த விஷயத்தினுடைய தன்மையை அறிந்து விடலாம். விஷயத்தின் தன்மையை எதிரே இருப்போரின் குண விசேஷத்தை எந்த கலப்பும் இல்லாமல் சரியாகப் பார்க்கத் துவங்கினால் அதுவே பிரச்சனையைத் தீர்ப்பதற்குண்டான ஆரம்பம்।


வாழ்க்கை என்பது தொடர்பு கொள்ளல்.
தொடர்பு கொள்ள தெளிவோடு இருத்தல் மிகவும் உதவும். தெளிவோடு இருக்க பணிவு அவசியம். பணிவு இருப்பின் குருவின் அண்மை கிடைக்கும். குருவின் அண்மை கோடான கோடி நன்மையை கொண்டு வந்து தரும். சொல்லி மாளாது.
எத்தனை கோயில்கள், எத்தனை தெய்வங்கள் இருப்பினும் குருவின் சந்நதிக்கு முன்பு ஈடாகுமா. கோபுரமும், கல்லும் அடையாளமாக இருந்த பல தெய்வச் சின்னங்களை பரவசத்தோடு பார்த்து விட்டு குருவின் சந்நதிக்கு வரும் போது கொஞ்சம் பயம் ஏற்படுகிறது.


குருவின் கூர்மையான பார்வையும், சிரிப்பும், பேச்சும் மிக அண்மையில் உணரும் போது இது வேறு என்று புரிகிறது. நடமாடும் தெய்வத்தை எல்லோராலும் ஏற்பதற்கு இயலாது. பணிவை இயல்பாய் கொண்டவருக்கு குரு வழிபாடு மிக மிக எளிது.


எதற்குப் பணிய வேண்டும் என்று கேட்பவருக்கு கல் தெய்வங்களே உத்தமம்.அந்த தெய்வங்கள் நேரடியாகப் பேசாது। மறைமுகமாகப் பேசும்। மறைமுகமாகப் பேசியது தெய்வமா இல்லையா என்றும் தெரியாது। எனவே பேசாதிருக்கும் தெய்வமே பெரிதும் புகழப்படும்.

.

குரு அவ்விதமல்ல.அது நேரடியான லீலா விநோதம்
















(பாலகுமாரன் - சில கோயில்கள் சில அனுபவங்கள் – குமுதம் பக்தி பிப்ரவரி 16-29 ,2008 )

http://www.kumudam.com/magazine/Bakthi/2008-02-16/pg10.php

http://www.angelfire.com/realm/bodhisattva/ramsuratkumar.html

Sunday, February 17, 2008

குதிரை சொன்ன புதிய வேதம் - எட்டாம் பாடம்

இதுவரை வெளிவராத, எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் தந்த குதிரை கவிதையின் எட்டாம் பாடம் இதோ உங்களுக்காக………



குதிரைகள் குளம்பினூடே
மண்கட்டி சிக்கிக் கொள்ளும்
மண்கட்டி உள்ளே அழுந்த
குதிரைகள் நொண்டத் துவங்கும்
நடையிலே கவிதை காட்டும்
குதிரைகள் நொண்டலாமா

கங்காரு குதித்தல் போல
குதிரைகள் ஓடலாமா
ஒருபக்கம் மழித்த முகமாய்
சிரிப்பதில் அழகு உண்டா
மொழி தெற்றிப் பேசுபவர்
கவிதையை யாரோ ரசிப்பர்

கூன்தென்னை குட்டை ஆலம்
நதி ஒதுங்கி சேறாய் நிற்றல்
வலைசிக்கி தவிக்கும் காக்கை
எத்தனை அவலம் இங்கே

குதிரையின் பின்னங்காலை
வெடுக்கென இழுத்துப் பற்றி
ஈரமண் அகற்றும் வித்தை
அறிந்தவர் எனக்குச் சொன்னார்
பிள்ளையை பிரித்துக் கொடுத்தால்
கர்ப்பிணித்தாய் வணங்கல் போல

கால்சுத்தம் செய்தால் குதிரை
கண்களால் நன்றி சொல்லும்
பேச்சிலே நன்றி சொன்னால்
பொய்யாக இருக்கக் கூடும்
கண்ணிலே நன்றி காட்ட
நெஞ்சிலே வந்து தைக்கும்
-இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் எட்டாம் பாடம்.

Friday, February 15, 2008

சினிமா ஒரு காட்டாறு. கரையிலிருந்தபடி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பேசுகிறார்……….


ஐயா, நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எல்லா விஷயங்களையும் இந்த வலைதளத்தின் மூலம் பரிமாறிக் கொள்வது தான் எங்களின் நோக்கம். உங்களின் சினிமா அனுபவம் பற்றியும் சொல்லுங்களேன்.

சினிமாவைப் பற்றி எனக்கும் பேச விருப்பம் உண்டு। சினிமாவில் அற்புதமான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவர்களின் அன்பில் , அரவணைப்பில் , நட்பில் திளைத்திருக்கிறேன்.

குறிப்பாக நண்பர், நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர் கம்பீரத்தை பல்வேறு சமயங்களில் நான் கவனித்து அதிசயப்பட்டிருக்கிறேன். பாட்ஷா படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. திரு. ரஜினிகாந்த் அவர்களின் அலுவலக மாடியில் ஒரு பெரிய ஹாலில் அமர்ந்திருந்தோம். அந்த ஹாலில் இரண்டு ஒற்றை சோபாக்களும், மூன்று பேர் அமரக் கூடிய ஒரு நீண்ட சோபாவும் இருந்தன..

ஒற்றை சோபாக்களில் இயக்குனர் திரு.சுரேஷ் கிருஷ்ணாவும் , திரு. ரஜினிகாந்த் அவர்களும் அமர்ந்திருக்க, மூன்று பேர் அமரக் கூடிய சோபாவின் நுனியில் நான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பேன். அந்த மூன்றாவது சோபாவில் வேறு யாரேனும் வருவார்கள் , உட்காருவார்கள், நகர்ந்து போவார்கள்। மூன்று பேருமே விவாதத்தில் ஈடுபட்டிருந்தால் இது தான் உட்காரும் விதமாக இருந்தது।

விவாதத்தினுடைய சூடு ஏற ஏற, நான் உட்கார்ந்து பேச முடியாமல் என் வழக்கப்படி எழுந்து நின்று வேட்டியை மடித்து கட்டி, கைகளை ஆட்டியபடி அந்த காட்சியை விவரித்து வசனத்தோடு என்னுடைய வெளிப்பாடை சொல்லிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் அவர்கள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் நடப்பது பார்த்து எழுந்து நின்று தள்ளிப் போய் மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவின் பின் பக்கம் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பேச்சு சுவாரசியத்தில் மெய்மறந்து அவருடைய நாற்காலியில் அமர்ந்து அவரிடம் பேசும் போது, மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவில் அவர் அமர்ந்து கொண்டார்.

என்னிடத்தில் சுரேஷ் கிருஷ்ணா ஏதோ சொல்ல முற்படுவது தெரிந்த போது குறுக்கிட வேண்டாம் என்று கையமர்த்தி விட்டு தொடர்ந்து நான் வேகமாக அந்த காட்சியை திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். திரு.சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் எழுந்து அருகே வந்து காதோரம் “அவருடைய நாற்காலியில் அமர்ந்து பேசுகிறீர்கள்.தயவு செய்து எழுந்திருங்கள்” என்று மெல்ல சொன்னார்.

நான் திடுக்கிட்டு என் தவறை உணர்ந்தேன். நான் எழுந்திருக்க முற்படும் போது, சுரேஷ் கிருஷ்ணா பேசியதையும் நான் எதிரொலிப்பதையும் அறிந்து திரு. ரஜினிகாந்த் அவர்கள் என் தோளை அழுந்தப் பற்றி உட்கார வைத்து “உட்காருங்கள்.இது ஒன்றும் சிம்மாசனம் அல்ல.வெறும் சோபா. ஆசனம். யார் வேண்டுமானாலும் உட்காரலாம்” என்று உரத்த குரலில் சொல்லி தொடர்ந்து என்னை பேசுமாறு கட்டளையிட்டார்। ஆனால் நான் உட்கார்ந்திருப்பது அவருடைய நாற்காலி என்று தெரிந்த பிறகு தொடர்ந்து என்னால் பேச முடியவில்லை।நான் எழுந்து நின்று என்னுடைய இடத்திற்கு வந்து விட்டேன்। அன்றைய விவாதம் முடியும் வரையில் திரு.ரஜினிகாந்த் அந்த ஒற்றை சோபாவில் உட்காரவில்லை.

வீடு திரும்பும் போது திரு. ரஜினிகாந்த் அவர்கள் அது ஒன்றும் சிம்மாசனம் அல்ல என்று சொன்னதும், தோளை அழுத்தி அமர்த்தியதும், தொடர்ந்து பேச கட்டளையிட்ட கம்பீரமும், பண்பும்,எளிமையும், பெருந்தன்மையும் ஞாபகத்திற்கு வந்தன. நாற்காலி என்பது ஒரு கெளரவமான விஷயம் தான். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அது நாற்காலி தான் என்று சாதாரணமாக சொன்ன அந்த மனிதரை இன்றளவும் என் மனம் நேசிக்கிறது.

கமலஹாசன் ஒரு அற்புதமான கலைஞர். யார் பத்து நிமிடம் அருகே நின்று பார்த்தாலும் நிச்சயம் வியந்து தான் போவார்கள். குணா படத்தின் விவாதம். முதல் நாள் ஒரு மாதிரி படத்தின் முதல் பகுதி தயாராகி விட்டது. முதல் சீன்,இரண்டாவது சீன்,மூன்றாவது சீன் என்று மடமடவென்று கதை ஒரு ஓட்டம் ஓடி விட்டது. கதை அடுத்தபடி எப்படி திரும்பும் என்ற யோசிப்பிலிருந்தபடி
அவருக்காக காத்துக் கொண்டிருந்த போது கார் விட்டு இறங்கி, கதவு திறந்து, மண் தரையில் கால் பதித்து நடந்து வந்து போர்டிகோவில் நுழைந்து பிறகு சிமெண்ட் தரையில் நுழைவதற்கு முன்பு “நேத்திக்கு பேசினோமே. அந்த சீன் பத்தி என்ன நினைக்கிறீங்க” என்று ஆரம்பித்தார்.
“நல்லாருக்கு சார்”
“அதுக்கு அடுத்த சீன்”
“நல்லாருக்கு சார்” என்று சொல்ல,
“இல்ல. அந்த சீன் தப்பு” என்று என்னை இடைமறித்து,
“அந்த சீனுக்கு பதிலா எப்படி இருக்கணும் தெரியுங்களா” என்று தொடர்ந்து கட்டிடத்திற்குள் நுழைவதற்குள் அந்த கதை விவாதத்தை ஆரம்பித்து விடுவார். அந்த கதை விவாதம் முந்தைய இரவு அவர் வீட்டிற்கு போனதோடு முடிந்து விடவில்லை. விடிந்த பிறகும் ஆரம்பிக்கவில்லை.

அந்த விவாதம் அவர் மனதில் தொடர்ந்து தொடர்ந்து நடந்து கொண்டிருந்திருக்கிறது. தூக்கத்தில் கூட இந்த கதையை யோசித்திருப்பாரோ என்று நினைக்கத் தூண்டும் அளவிற்கு அவர் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே விவாதத்தை ஆரம்பித்து விடுவார்.

வாசலில் டி।என்।எஸ்ஸும், அவர் மகன் சக்தியும் பல்வேறு பிரச்சனைகளோடு காத்திருப்பார்கள்। ஆனால் போர்டிகோ தாண்டி, வராண்டா தாண்டி,ஹால் தாண்டி, மாடிப்படி ஏறி உள்ளுக்குள் ஹாலுக்குள் போகும் வரை விவாதம் வேகமாக நடந்து ஒரு உச்ச கட்டத்தை அடையும் போது ஒரு மணி நேரம் ஆகி விடும். உள்ளே நுழையும் போதே விவாதம் என்பது கமலஹாசனிடம் மிகச் சாதாரணமாக தினம் தினம் அவரோடு சுற்றியிருக்கின்ற படைப்பாளிகள் காணும் விஷயம்।


எந்த நேரமும் படைப்புத் தான். எந்த நேரமும் சினிமா தான் என்று சிந்திக்கின்ற கலைஞன் திரு.கமலஹாசன்। அவரிடம் வேலை செய்வது சந்தோஷமான விஷயம். அடுத்த முறை அவர் உள்ளே நுழையும் போது இந்த சீன் எப்படியிருக்கு என்று கேட்டார். நீங்க ஓ.கே என்று சொன்னால் இந்த சீனை இப்படி இம்ப்ரூவ் பண்ணலாம். வேண்டாம்னு சொன்னால் இதுக்கு ஒரு மாற்று சீன் வச்சிருக்கேன் என்று ஆரம்பிக்க, அவர் வாய் விட்டு சிரித்தார்.


இது தான்। இது தான் நான் எதிர்பார்க்கிறேன்.இதை எதிர்பார்த்து எனக்கு கிடைக்கா விட்டால் கொஞ்சம் கோபமடைகிறேன்। நேற்றைய விவாதத்தின் எதிர்பக்கமும் , ஆதரவான பக்கமும் நாம் இருக்க வேண்டும்।உள்ளே நுழைந்ததும் ஆரம்பித்து விட வேண்டும்.இந்த பலமுள்ளவர்கள் தான் எனக்கு இணையாக வர முடியும். இல்லாது போனால் கொஞ்சம் கோபம் வருகிறது.கோபக்காரர் என்றோ, சண்டைக்காரர் என்றோ சொல்கிறார்கள்.நான் கோபமானவன் அல்ல. கொஞ்சம் வேகமானவன் என்றார். எனக்கு அவர் வேகம் எப்போதும் பிடிக்கும்.


உல்லாசம்,முகவரி,சிட்டிசன் என்ற படங்களில் அஜித் என்கிற அற்புதமான மனிதரோடு பழக நேர்ந்தது. பேரழகர். ஆனால் அதைப் பற்றிய சிறிய கர்வம் கூட இல்லாத அமைதியான மனிதர். ஒரு கைதி கூண்டில் ஏறி தன்னுடைய நிலைமையை சொல்ல வேண்டிய ஒரு காட்சி சிட்டிசனில் இருந்தது.ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்து அதற்குண்டான வசனத்தை எழுதி, இயக்குனரிடம் ஒப்புதல் வாங்கி அதைப் பற்றி நடிகரிடம் பேசும் போது , “எப்படி அந்த காட்சி இருக்கிறது. எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள்” என்று சொல்ல, நான் அந்த கைதி கூண்டில் ஏறி கையை வைத்துக் கொண்டு எப்படி பேச வேண்டும் என்பதை உரத்த குரலில் சொன்னேன்.

உற்று நான் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். நான் கீழிறங்கினேன். நான் பேசி முடித்ததும் சுற்றி உள்ளவர்கள் மிகுந்த பரவசத்தோடு அற்புதம் என்பதாகப் பார்த்தார்கள். ஆனால் அஜித் அவர்கள் மெல்ல என் தோளில் கை வைத்து அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி வராண்டாவிற்கு அழைத்துப் போனார்.

பாராட்டப் போகின்றார் என்ற எண்ணம் எனக்கும், இயக்குனருக்கும் இருந்தது. இயக்குனர் சரவண சுப்பையா ஆவல் மேற்பட்டு எப்படி இருக்கிறது,எப்படி இருக்கிறது என்று கேட்க, திரு.அஜித் அவர்கள் உடனே பதில் சொல்லவில்லை. மெல்ல என்னை ஏறிட்டு, “ஏன் கமலஹாசன் போல பேசுகிறீர்கள்” என்று கேட்டார்.

“இல்லையே. நான் கமலஹாசன் போல பேசவில்லை. நான் என்னை மனதில் நினைத்துக் கொண்டு தான் அதை எழுதினேன். நானாகத் தான் நினைத்துக் கொண்டு அதைப் பேசினேன்” என்று சொன்னேன்.

“ இல்லை. உங்களிடம் கமலஹாசனின் சாயல் பலமாக இருக்கிறது. கமலஹாசனின் முகபாவங்கள் உங்களுக்குள் ஆழ பதிந்து விட்டன.கமலஹாசனின் குரல் , அவர் சொல்கிற விதம் இவைகளையே நீங்கள் திரும்பச் செய்கிறீர்கள். நீங்கள் செய்யலாம். பலர் பாராட்டலாம். ஆனால் கமலஹாசன் போல நான் நடித்தால் நன்றாக இருக்காது. எனக்கென்று ஒரு இடத்தை நான் பிடித்து வைத்திருக்கிறேன். அது போலத் தான் நான் பேச வேண்டும். நீங்கள் பேசுவது போல பேச மாட்டேன்” என்று சொன்னார்.

நான் மெளனமாக இருந்தேன். சரவண சுப்பையா அப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்று வற்புறுத்த, அவர் தீர்மானமாக மறுத்து, “உங்களை குறை சொல்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு என் பாதை முக்கியம். நீங்கள் செய்ததற்கு நேர் எதிர்பதமாகத் தான் என் பேச்சு இருக்கும்” என்று சொன்னார்.அது சிறப்பாக இருந்தது என்பதை பின்னால் படம் பார்க்கும் போது தெரிந்து கொண்டேன்.

எதனாலும் கவரப்படாத ஒரு தெளிவான மனிதரோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அன்று பேசிய விதம் உணர்த்தியது. தன் தனித்துவத்தின் முக்கியத்துவத்தை விடாது வைத்திருக்கின்ற ஆற்றல் புரிந்தது. திரு. அஜித் அவர்கள் சிறப்பதற்கு இந்த குணங்கள் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அமைதியான தனுஷ், கொஞ்சம் ஆரவாரமான அதே நேரம் அன்பான சிம்பு, குணவானான விக்ரம், கம்பீரமான ரகுவரன், பிரியமான பிரபுதேவா, ஆற்றல் மிகுந்த அர்ஜுன் என்று பல நடிகர்களோடு பல நல்ல அனுபவங்கள் உண்டு। நான் இது வரை பேசிப் பழகாத நடிகர் திரு. விஜய் மட்டும் தான்.

இப்போது சினிமா எதுவும் நான் ஏற்றுக் கொள்வதில்லை। சினிமாவில் உழைக்கின்ற அளவிற்கு உடல்வலுவு எனக்குப் போதவில்லை. அது தவிர நான் எழுத வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கும்படியால் சினிமாவில் இருந்து சற்று விலகி எழுத்துப் பணியில் அதிகம் ஈடு
படுத்திக் கொண்டிருக்கிறேன்.

சினிமா ஒரு காட்டாறு. அது கம்பீரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். கரையிலிருந்தபடி…………….

Thursday, February 7, 2008

குதிரைக் கவிதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

குதிரைகள் சொன்ன பாடங்களாக “இரும்பு குதிரைகள்” என்ற பரிசும், புகழும் பெற்ற எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் இரண்டாவது நாவலில் இடம் பெற்ற கவிதைகளின் சிறு தொகுப்பு.










குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்து போகும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.











குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்.









குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர.
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று


இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் மூன்றாம் பாடம்









நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
மற்றைய உயிர்கள் போல.

நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை
தொட்டதும் புரிந்து கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும்

தூங்குதல் பெரிய பாபம்
தூங்கவா பிறந்தீர் இங்கு
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார்
குதிரைகள் கண்கள் மூடி
குறி விறைத்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்ச கட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம்.








நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர் குணம் அறியமாட்டார்.

வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி.

கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்.


வல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கூரிய நகமும் பல்லும்

யாருக்கும் தீங்கு செய்யா
நத்தைக்கும் கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தைத் தேக்கும்

குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன ?

வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரைக்கு
கொம்பில்லை ; விஷமுமில்லை
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர் ?
குதிரைகள் காதைப் பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.



இதுவரை வெளிவராத கவிதை இது, இரும்பு குதிரை நாவலில் ஐந்தாம் பாடம் இல்லையே என்று கேட்டதற்கு எழுதிக் கொள்ளுங்கள் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் மூன்று நிமிடத்தில் சொன்ன கவிதை இது. இதை உங்களுக்கு கொடுப்பதில் இந்த வலைத்தளம் பெருமைப்படுகிறது.

னிதரின் செருமல் போல
குதிரையின் கனைப்பு இல்லை
குதிரைகள் கனைப்பின் மூலம்
செய்திகள் சொல்வதில்லை.
அது அடிக்குரல் பேச்சு அல்ல
அந்தரங்க கேலியுமில்லை
குதிரைகள் தனக்குத் தானே
பேசலின் முயற்சி கனைப்பு
சிலசமயம் குதிரை கனைப்பில்
சின்னதோர் அலுப்பு உண்டு
அடுத்ததாய் செய்யப் போகும்
வேலையின் முனைப்பு உண்டு

குதிரையின் கனைப்பைக் கேட்டு
மறு குதிரைத் திரும்பிப் பாரா
ஒரு கனைப்புச் சத்தம் கேட்டு
மறு கனைப்பு பதிலாய் தாரா.
குதிரைகள் உலகம் எளிது
எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.
தன் நெஞ்சைத் தானே நோக்கி
குதிரைகள் பேச்சே கனைப்பு

மற்றவர் என்ன சொல்வார்
என்பதே மனிதர் உலகம்
உற்றவர் எனக்கு நானே
என்பதே குதிரை வாழ்வு

குதிரையின் கனைப்பு கேட்க
எனக்கு நான் வணக்கம் சொல்வேன்

வேறெவரும் வாழ்த்த வேண்டாம்
வேறெவரும் வணங்க வேண்டாம்
என் செய்கை எனக்குத் தெரியும்
பூமாலைத் தேவையில்லை
தொடர்ந்து போ மேலே மேலே
குதிரையின் கனைப்புச் சொல்லும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்.

Tuesday, February 5, 2008

காலம் உணர்த்தும் கடமை– எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் பார்வையில்

ஐயா, இப்போது பலர் ஊர் ஊராக ப ல கோவில்கள் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.தல யாத்திரை மேற்கொள்ள சரியான காலம் எது ?

அந்த இளைஞனுக்கு வயது இருபத்தியெட்டு. ஒரு தனியார் கம்பெனியில் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் என்ற பகுதியில் மேனேஜர் உத்தியோகம். தொழில் ஆராய்ச்சியும் ,முன்னேற்றமும் என்பது குறித்து இடைவிடாத சோதனைகள் செய்து பார்க்கும் பகுதியில் உத்தியோகம்.

திருமணம் ஆகவில்லை. நல்ல குடும்பத்தில் பிறப்பு. தன் தங்கைக்கு திருமணமாகவில்லையென்ற கவலையோடு என்னிடம் வந்து பேச, மயிலாப்பூரில் இருக்கும் முண்டகக்கண்ணிக்குப் பிரார்த்தனை செய்து கொள்ளச் சொன்னேன். அந்தக் குடும்பம் பிரார்த்தனை செய்து கொண்டது. தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணாமாகியது. பல நாட்கள் பலவிதமாக தடைபட்ட தங்கையின் திருமணம் நன்றாக நிறைவேறியது என்பதால் ஏற்பட்ட கடவுள் பக்தியா அல்லது இயல்பான பக்தியா தெரியவில்லை. அந்த இ ளைஞன் மறுபடியும் ஒரு மாலைநேரம் வந்து நான் கைலாஷ் யாத்திரை போகட்டுமா என்று கேட்டான்.

பல்வேறு விதங்களில் கைலாஷ் யாத்திரைகள் எளிதாகிவிட, சம்பாதிக்கும் காசில் மெல்ல சேர்த்து வைத்து, கைலாஷ் யாத்திரை பற்றி நிறைய தெரிந்து கொண்டு சந்தோஷமாகக் கிளம்பி விட்டான்। தன் முதுகு சுமக்கும் அளவுக்கு மூட்டையோடும், மழைகோட்டோடும், கம்பளிக் குல்லாவோடும் விமானம் ஏறினான். அவனுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும், உறவினர்கள் பல பேருக்கும் இந்த விஷயம் ஆச்சரியமாகவும் ,அதிகப் பெருமை தருவதாகவும் இருந்தது.
மறுபடியும் சொல்கிறேன். அந்த இளைஞனுக்கு அப்போது வயது இருபத்தியெட்டு.

இதற்கு நேர் எதிராய் இன்னொரு விஷயம்.

அவர் எனது நண்பர். அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, இன்னொரு முறை பதவி நீடிப்பு செய்ய இயலாது என்று சொல்லிக் கட்டாயமாக அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்ப, அவர்கள் கொடுத்த காசோடு வீட்டிற்கு வந்தவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

“என்ன ஸார். மகன்களும்,மகளும் நல்ல நிலையில் இருக்க இனிமேல் என்ன பிரச்சினை. நீங்க பாட்டுக்கு ஊர் ஊராகப் போய், கோவில் கோவிலா பார்த்துட்டு வாங்களேன்”. என்று அண்டை அயலார்கள் சொல்ல,மனைவியும் நச்சரிக்க, சரி என்று கிளம்பினார்.

அவர் தன் பெரும்பகுதியை வடக்கில் கழித்து விட்டதால், தென்னாடு சுற்றுவதற்கு ஆசைப்பட்டார், தமிழகக் கோயில்கள் அவருக்கு மிக முக்கியம் என்று சொல்லப்பட்டது.தன் மனைவியோடு பாட்டியாலாவிலிருந்து இரயில் மூலம் ஜூன் மாதம் தமிழகத்திற்கு வ ர , வெயில் இங்குப் புற்களை தீய்த்துக் கொண்டிருந்தது. போவோர், வருவோர் தலைமுடியைப் பொசுக்கிக் கொண்டிருந்தது.

சஃபாரி உடை இனி உபயோகமில்லை. ஆனால், நன்றாக இருக்கிறதே. அ ணிந்து பழகிவிட்டதே என்று சஃபாரி சூட்டோடு சென்னை நகர் வலம் வந்தார். நாலு முழ வேட்டி, மேல் துண்டு போட்டாலே உடம்பு எரியும் சென்னையில் சஃபாரி சூட் புழுங்கி எடுத்தது. இடைவிடாத எரிச்சலைக் கொடுத்தது.பாட்டியாலாவில் வெயில் உண்டுதான், ஆனால் இப்படி வியர்த்து வழியாது என்று புலம்ப வைத்தது.

சென்னையிலிருந்து அவர் முதலில் கும்பகோணம் இறங்கினார். சஃபாரி சூட்டுக்கு மாற்று ஏற்பாடாக அவர் கட்டம் போட்ட லுங்கி தான் கொண்டு வந்திருந்தார்.ஏனெனில் அவருக்கு வேஷ்டி கட்டத் தெரியாது.கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குக் கட்டம் போட்ட நீல லுங்கியோடு போனால் விடுவார்களா. நாலு முழம் வேஷ்டி வாங்கிவிடலாமா எனச் சிந்தித்தார்.

“சஃபாரி தான் அழகாக இருக்கிறது. சஃபாரியில் பார்த்துப் பார்த்து நீங்கள் வேஷ்டி கட்டிக்கொண்டால் சமையற்காரனைப் போன்று தோற்றமளிக்கிறீர்கள். எனவே கோயிலுக்குச் சஃபாரி உடையிலேயே வாருங்கள்” என்று அவர் மனைவி சொல்ல ,சஃபாரியில் கோவிலுக்குக் கிளம்பி விட்டார்.

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் அன்று பிரதோஷம். கூட்டமான கூட்டம். அங்கு கூடியிருந்த ஆயிரத்து நானூறு பேரில் இவர் மட்டுமே சஃபாரி உடை உடுத்தியிருந்தார். வெயில் பிளந்து கட்டியது. ஜனங்கள் முட்டி மோதிக் கொண்டு உள்ளே கருவறை நோக்கி நகர, ஜனங்களுக்கு அறிவே இல்லை என்று இவர் வாய் தப்பிச் சொல்லி விட, பக்கத்தில் இருந்த கிழவி பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்.

“நீ எங்க வானத்திலேர்ந்து வர்ரியா . கோட்டும், சூட்டும் போட்டுக்கிட்டா ஐரோப்பாக்காரனா. இன்று எதுக்கு வரணும் இஞ்ச எதுக்கு சாமி தரிசனம்” என்று கும்பகோணம் பாஷையில் பிளந்து கட்டினாள்.கூட்டம் ஆமோதித்தது.

அவருக்கு கும்பேஸ்வரர் மீது கோபம் வந்தது. உன்னைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். கூட்டத்தோடு போவதை விட, கூட்டத்திலிருந்து வெளிவருவது மிகப்பெரிய வேதனையாய் இருந்தது. உடை கசங்கியது. சஃபாரி சூட்டின் பட்டன்கள் அறுந்தன . மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்தக் கோவிலில் மட்டுமல்லாது, பல கோவில்களில் அவருக்கு மோசமான அனுபவங்களே ஏற்பட்டன.

காரணம், அவருடைய உடல்நிலை தமிழகத்தின் வெயிலையும் , கூட்டத்தையும் பொறுத்துக் கொள்வதாக இல்லை. விசேஷ நாட்களில் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை. அறுபது வயதிற்குப் பிறகு ஒரு கும்பலில் புகுந்து புறப்படுவதற்கோ அல்லது பசியை பொறுத்துக்கொண்டு வரிசையில் முன்னேறுவதற்கோ, தண்ணீர் குடிக்காமல் பல மணிநேரம் தாக்குப் பிடிப்பதற்கோ முடியாது என்பது தெரியவில்லை.யாரோ சொன்னார்கள் என்று தலயாத்திரை புறப்பட்ட அவர் அதில் தனக்கு எந்தவித உற்சாகமும் ஏற்படவில்லை என்பதை பத்து நாட்களுக்குப் பிறகே புரிந்து கொண்டார்.

அந்த நண்பர், எதேச்சையாக என்னை சென்னை மயிலாப்பூர் கோவிலில் சந்தித்தபோது அவருடைய அனுபவங்களை சொல்ல, தலயாத்திரை போக வேண்டாம் என்று நான் அவருக்கு அறிவுரை சொன்னேன். வீட்டோடு அமைதியாக உட்கார்ந்து பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்ளச் சொன்னேன். கற்றுக் கொடுங்கள் என்று உடனே என் கையைப் பிடித்துக் கொண்டார். அவருக்கு வேறு ஒரு நபரை அடையாளம் காட்டினேன்.

சிறிய யோகாசனங்கள் செய்யவும், தினமும் பூஜை செய்யவும், மந்திரஜபங்கள் செய்யவும் அந்த நண்பரிடம் அவர் கற்றார். மனைவியும் ஆ சைப்பட

அவருக்கும் மந்திரஜபங்கள் சொல்லித் தரப்பட்டன. மனைவியும் யோகாசனம் செய்யத் துவங்கினார். இரண்டு பேரும் மாலை இருட்டிய பிறகு கடற்காற்று பூமியை நோக்கித் திரும்பிய பிறகு, கடற்கரைச் சாலையில் நடக்கப் பழகினார்கள்.

ஐந்து மணிக்கு எழுந்திருந்து குளித்துவிட்டு ஆறுமணிக்கு கபாலி கோவிலுக்கு சென்று நர்த்தன விநாயகர் அபிஷேகம் பார்த்து, கபாலிக்கும், கற்பகாம்பாளுக்கும் வணக்கம் சொல்லி, வலம் வந்து ஏழு மணிக்கு வீட்டில் அடங்கிக் கொண்டார்கள். பூஜை செய்தார்கள். அமைதியாய் மந்திரஜபம் செய்தார்கள்.

காலைச் சிற்றுண்டி முடித்துவிட்டு அயர்ந்து தூங்கினார்கள். பிறகு பேப்பர் படித்துவிட்டு மதிய உணவு முடித்து மறுபடியும் தூங்கினார்கள். மாலைநேரம் டி.வி. பார்த்துச் சந்தோஷப்பட்டார்கள், இரவு நேரம் நடைப்பயிற்சிக்கு சென்றார்கள். எப்போதாவது ஆன்மீகக் கூட்டங்களுக்கு போய் முன்வரிசையில் உட்கார்ந்து காதார இறைவன் புகழைக் கேட்டுக் கொண்டார்கள்.சென்னை நகரம் அவர்களுக்கு இப்போது சொர்க்கமாக மாறியது.பாட்டியாலாவில் இருந்தா இந்த மாதிரி எல்லாம் கேட்கமுடியுமா என்று சந்தோஷப்பட்டார்கள்.

எதற்கு இந்த இரண்டு வெவ்வேறு நபரைக் காட்டுகிறேன் என்பது புரிந்திருக்கும்.

தலயாத்திரை போவது வயதான பிறகு என்று ஒரு காலும் வைத்துக் கொள்ளக்கூடாது. தலயாத்திரை போவதற்கு வெகு நிச்சயமாய் நல்ல வயது மத்திம வயதே.

பதினெட்டு, இருபது வயதில் எதுவும் புரியாத வரையில் தலயாத்திரைகள் மேற்கொள்ளுவது வீண். ஆனால் உடம்பில் வலு சேர்ந்து, புத்தியில் தெளிவு உண்டாகும் நேரத்தில் கைலாஷ் யாத்திரை போன்ற கடினமான யாத்திரைகள் மேற்கொள்வது என்பது மிக உன்னதமான விஷயம்.

மற்ற தல யாத்திரைகள் திருமணமாவதற்கு முன்பு தனியே போகும் போது ஒரு வெறுமை ஏற்படுத்தும்। ஆனால் திருமணமான பிறகு, குழந்தைகள் பிறந்து, அவர்களுக்கு பத்து வயது ஆகும் போது வெகு நிச்சயமாய் உங்களுக்கு நாற்பது வயது ஆகியிருக்கும். மனைவிக்கு முப்பத்தைந்து வயது ஆகியிருக்கும்.


அந்த நேரத்தில் மற்ற தலயாத்திரைகள் மேற்கொள்ளும் போது குழந்தைகளுக்கு குதூகலம் கொடுக்கும். குழந்தைகளுக்கும் உங்களுக்கும் மிக நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்தும். சந்தோஷம் தரும்.உங்களை அ மைதிப்படுத்தி, மெல்லப் பக்குவப்படுத்தும்.

நாற்பது வயதுதான் ஸார் உழைக்கிற நேரம். அந்த நேரத்துல கோயில் கோயிலா குடும்பத்தோடு அலைய முடியுமா என்று கேட்கிறீர்களா.

வருஷத்தின் எல்லா நாட்களும் அலையச் சொல்லவில்லை. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தல யாத்திரை போகலாம். சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் கோவில்களைப் பிரித்துக் கொள்ளலாம். பரத கண்டம் முழுவதும் சுற்றலாம். இளமையான வயதை விட மத்திம வயது இன்னும் சிறப்பான நேரம். வயதான பிறகு மெல்ல பயணம் செய்வதைத் தவிர்த்து மந்திர ஜபத்தில் ஈடுபட, மனதில் மிகப் பெரிய சந்துஷ்டியும், அமைதியும் விளங்கும். உ டம்பும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் சொந்த அபிப்ராயம்.